மதுரையைச் சேர்ந்த முனைவர் சங்கரலிங்கத்திற்கு "தமிழ்ச் செம்மல் விருது" ! தமிழக முதல்வர் வழங்கினார் !!

Posted by Admin November 03, 2020

தமிழ் வளர்ச்சிக்காக பாடுபட்டவர்கள் 37 பேருக்கு ‘தமிழ்ச் செம்மல் விருது’:

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (3–ந் தேதி) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு நாள் விழாவையொட்டி, தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் 2019–ம் ஆண்டுக்கான தமிழ்ச் செம்மல் விருதுகளுக்கு தெரிவு செய்யப்பட்ட 37 விருதாளர்களில், 19 விருதாளர்களுக்கு தமிழ்ச் செம்மல் விருதுகளை வழங்கி, பொன்னாடை அணிவித்து சிறப்பித்தார்.

முனைவர் பி. சங்கரலிங்கம், மதுரை.

புரட்சித் தலைவி அம்மா கடந்த 25.7.2014 அன்று சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ் வெளியிட்ட அறிவிப்பில், தமிழ் வளர்ச்சிக்காகத் தனி ஆளாகத் தொண்டு செய்தும், தமிழ் அமைப்பு வைத்துத் தமிழ் மொழிக்காக அரும்பாடுபடும் ஆர்வலர்களை மாவட்டந்தோறும் கண்டறிந்து, அவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில், தமிழ்ச் செம்மல் விருது ஆண்டுதோறும், ஒரு மாவட்டத்திற்கு ஒருவர் என்றவாறு வழங்கப்படும் என்றும், இவ்விருது பெறுபவருக்கு 25 ஆயிரம் ரூபாய்க்கான விருதுத் தொகையும், தகுதியுரையும் வழங்கப்படும் என்றும் அறிவித்தார். அதன்படி, தமிழ்நாடு அரசு 2015–ம் ஆண்டு முதல் தமிழ்ச் செம்மல் விருதுகளை வழங்கிச் சிறப்பித்து வருகிறது.

யார், யார்?

அவ்வகையில், 2019–ம் ஆண்டுக்கான தமிழ்ச் செம்மல் விருதுகளுக்கு தெரிவு செய்யப்பட்ட, முனைவர் கோ.ப.செல்லம்மாள் (சென்னை மாவட்டம்), முனைவர் மரியதெரசா (திருவள்ளூர் மாவட்டம்), முனைவர் எஸ். ஸ்ரீகுமார் (காஞ்சிபுரம் மாவட்டம்),

ச. இலக்குமிபதி (வேலூர் மாவட்டம்), கவிஞர் அ.க. இராசு (எ) பாளைவேந்தன் (கிருஷ்ணகிரி மாவட்டம்), கவிஞர் எறும்பூர் கை. செல்வகுமார் (திருவண்ணாமலை மாவட்டம்), கல்லைக்கவிஞர் வீ. கோவிந்தராசன் (விழுப்புரம் மாவட்டம்),

முனைவர் எஸ்.எம். கார்த்திகேயன் (கடலூர் மாவட்டம்), முனைவர் த. மாயகிருட்டிணன் (பெரம்பலூர் மாவட்டம்), முனைவர் து. சேகர் (அரியலூர் மாவட்டம்), வ. முத்துமாரய்யன் (சேலம் மாவட்டம்), கவிஞர் மா. இராமமூர்த்தி (தருமபுரி மாவட்டம்), ப. சுப்பண்ணன் (நாமக்கல் மாவட்டம்), முனைவர் எண்ணம்மங்கலம் அ. பழநிசாமி (ஈரோடு மாவட்டம்),

முனைவர் சு. இளவரசி (கரூர் மாவட்டம்), கவிஞர் அ. ஞானமணி (கோயம்புத்தூர் மாவட்டம்), முத்து சுப்ரமணியன் (திருப்பூர் மாவட்டம்), சபீதா போஜன் (நீலகிரி மாவட்டம்), அ. அந்தோணி துரைராஜ் (திருச்சிராப்பள்ளி மாவட்டம்), முனைவர் அ.அ.ஞானசுந்தரத்தரசு (புதுக்கோட்டை மாவட்டம்),

சொ. பகீரதநாச்சியப்பன் (சிவகங்கை மாவட்டம்), ஆதி நெடுஞ்செழியன் (தஞ்சாவூர் மாவட்டம்), இரா. கல்யாணராமன் (திருவாரூர் மாவட்டம்), சி. சிவசங்கரன் (நாகப்பட்டினம் மாவட்டம்), மை. அப்துல்சலாம் (ராமநாதபுரம் மாவட்டம்), முனைவர் பி. சங்கரலிங்கம் (மதுரை மாவட்டம்), முனைவர் அ.சு. இளங்கோவன் (திண்டுக்கல் மாவட்டம்),

சா.பி. நாகராசன் (எ) தேனி ராஜதாசன் (தேனி மாவட்டம்), முனைவர் இரா. இளவரசு (விருதுநகர் மாவட்டம்), க. அழகிரிபாண்டியன் (திருநெல்வேலி மாவட்டம்), நம். சீநிவாசன் (தூத்துக்குடி மாவட்டம்), குமரிஆதவன் (கன்னியாகுமரி மாவட்டம்), ந. கருணாநிதி (திருப்பத்தூர் மாவட்டம்), வத்சலா சேதுராமன் (செங்கல்பட்டு மாவட்டம்), த. தினகரன் (ராணிப்பேட்டை மாவட்டம்), உமாகல்யாணி (தென்காசி மாவட்டம்) மற்றும் பெ. அறிவழகன் (கள்ளக்குறிச்சி மாவட்டம்) ஆகிய 37 விருதாளர்களில்,

19 விருதாளர்களுக்கு முதலமைச்சர் இன்று தமிழ்ச் செம்மல் விருதிற்கான விருதுத் தொகை 25 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை மற்றும் தகுதியுரை வழங்கி, பொன்னாடை அணிவித்து சிறப்பித்தார்.

தமிழ்ச் செம்மல் விருதுகளுக்கு தெரிவு செய்யப்பட்ட இதர விருதாளர்களுக்கு அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் முன்னிலையில் அமைச்சர்களால் தமிழ்ச் செம்மல் விருதுகள் வழங்கப்படும்.

இந்த நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், பள்ளிக்கல்வி, இளைஞர் நலன் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், மின்சாரம், மதுவிலக்கு துறை அமைச்சர் பி.தங்கமணி, மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், உயர்கல்வி மற்றும் வேளாண்மைத் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், தமிழ்ப் பண்பாடு துறை அமைச்சர் க.பாண்டியராஜன், தலைமைச் செயலாளர் க. சண்முகம், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறைச் செயலாளர் மகேசன் காசிராஜன், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் கோ. விசயராகவன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

நன்றி : மக்கள் குரல்

Video courtesy : NewsJ - https://www.youtube.com/watch?v=A9Pmbur85fY